விஜய் பாடிய பாடலில் மிகவும் பிடித்தது: அம்மா ஷோபா பதில்

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' இசை வெளியீட்டில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சியும், அம்மா ஷோபாவும் கலந்து கொண்டு விஜய்யைப் பற்றிப் பேசினார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்று (பிப்ரவரி 15) இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கு பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என யாருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை. 'மாஸ்டர்' படக்குழுவினர் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:

“மேடைக்குப் பேச அழைப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை. அனைவருமே உழைக்கிறோம். உழைக்கும் அனைவருமே முன்னேறுவது இல்லை. நான் என் உழைப்பால் உயர்ந்தேன். அதைத் தான் விஜய்யும் இப்போது செய்து கொண்டிருக்கிறார். எனக்குத் தமிழே தெரியாது. ஆனால் தமிழ், இந்தி, தெலுங்கு எனப் படங்கள் பண்ணியிருக்கேன். 'மாஸ்டர்' விஜய்யை நான் கணித்தேன் என்கிறீர்கள். 'நாளைய தீர்ப்பு' நான் கணித்தது தான். நீங்கள் எதை நினைக்கிறீர்கள் என்று தெரியாது”

இவ்வாறு எஸ்.ஏ.சி பேசினார்.

எஸ்.ஏ.சியுடன் விஜய்யின் அம்மா ஷோபாவும் மேடையேறினார். அவர் விஜய் பாடியதில் தனக்கு 'ஓ பேபி' மற்றும் 'குட்டி ஸ்டோரி' பாடல் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். அதனைத் தொடர்ந்து 'குட்டி ஸ்டோரி' பாடலை மிகவும் ஸ்டைலாக பாடியிருந்தார் என்று குறிப்பிட்டார். அப்போது தொகுப்பாளர் பாவனா 'நீங்கள் விஜய்யிடம் கேட்க விரும்புவது' என்றார். உடனே "விஜய் என்னைக் கட்டிப்பிடிக்க வேண்டும்" என்றார். அப்போது மேடையேறிய விஜய் தனது அப்பா - அம்மா இருவரையும் கட்டியணைத்து தனது அன்பைப் பரிமாறிக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE