ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படத்துடன் யாஷ் நடித்து வரும் 'கே.ஜி.எஃப் 2' போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
'கே.ஜி.எஃப்' படத்துக்குக் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப் 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டன்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் வெளியீடு 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இருக்கும் என தகவல் வெளியானது.
ஆனால், படக்குழுவினரோ அக்டோபர் 23-ம் தேதி வெளியீடு என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள். அதிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ரஜினி படத்துக்குச் சிக்கலை உருவாக்கியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை இந்தாண்டுக்குள் வெளியிட்டால் தான், விஜய் நடிக்கும் 'தளபதி 65' படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட முடியும் என்று சன் பிக்சர்ஸ் கருதுகிறது. இதனால், 'அண்ணாத்த' படத்தை அக்டோபர் 23-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளது. இதே தேதியில் தான் 'கே.ஜி.எஃப் 2' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல வியாபாரம் உள்ளது. ஆனால், 'கே.ஜி.எஃப் 2' படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு, 'அண்ணாத்த' படத்தின் வியாபாரத்தைப் பாதிக்கும். இதனால் ’அண்ணாத்த’ அக்டோபர் 23-ம் தேதி வெளியிடப்படுமா அல்லது வேறு வெளியீட்டுத் தேதியை முடிவு செய்வார்களா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.