குரு ஒரு வழி காட்டியிருக்கிறார்: ரஜினிக்கு ஆதரவாகக் களமிறங்கும் லாரன்ஸ்

By செய்திப்பிரிவு

ரஜினி தெரிவித்த கருத்துகளை மக்களிடையே எடுத்துரைக்க, களமிறங்கியுள்ளார் நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது அரசியல் பார்வை, அரசியல் வருகை, அரசியல் மாற்றத்துக்காக வைத்துள்ள திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் ரஜினி எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து ரஜினியின் கருத்துகள் அரசியலில் எப்படி எடுபடும் என்று பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

"அரசியல் மாற்றம் இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை. மக்களிடம் இதைக் கொண்டு போய்ச் சேருங்கள். அந்த எழுச்சி எனக்குத் தெரியட்டும். அப்போது அரசியலுக்கு வருகிறேன்" என்று ரஜினி தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார். இதை முன்வைத்து ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் பலரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

தற்போது தீவிர ரசிகரான நடிகர் மற்றும் இயக்குநரான லாரன்ஸும் இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ளார். இது தொடர்பாக லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில், "குரு சேவை. உங்களுக்குத் தெரியும். என் தலைவரைப் போலவே எனக்கும் எந்த தேவையும் கிடையாது. எனக்கு அரசியல் தெரியாது. எந்த கட்சிக்கும் எதிரி கிடையாது. குரு ஒரு வழி காட்டியிருக்கிறார்.

அவர் வழி நடப்பதும், அந்த பாதையைப் பலப்படுத்துவதும் என் கடமை. கடமையை நிறைவேற்ற நாளை முதல் களமிறங்குகிறேன். மாற்றம் நம்மிலிருந்து துவங்கட்டும். இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல!" என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE