கரோனா அச்சம்: கவலைப்படாத 'பிரபாஸ் 20' படக்குழு

கரோனா வைரஸ் அச்சத்தைப் பற்றி கவலைப்படாமல், ஜார்ஜியா நாட்டில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது 'பிரபாஸ் 20' படக்குழு.

'சாஹோ' வெளியீட்டுக்கு முன்பாகவே, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் பிரபாஸ். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை ராதா கிருஷ்ணா இயக்கி வருகிறார். 'சாஹோ' வெளியீட்டுக்குப் பிறகு நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கி துரிதமாக நடத்தி வருகிறார்கள். தற்போது ஜார்ஜியா நாட்டில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கச் சென்றுள்ளது படக்குழு. ஆனால், உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சத்தால், அனைத்துப் பணிகளும் முடங்கிப் போயுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன.

ஆனால், 'பிரபாஸ் 20' படக்குழு மட்டும் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக இயக்குநர் ராதா கிருஷ்ணா தனது ட்விட்டர் பதிவில் “10 டிகிரி குளிர், தொடர் மழை, கரோனா தொற்று பீதி. ஆனால் படக்குழுவின் உற்சாகத்தை எவற்றாலும் தடுக்க முடியாது. #பிரபாஸ்20” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவுடன் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, 'மஹாநடி' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் பிரபாஸ். இதனை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE