மார்ச் 27-க்குப் பின் புதுப் படங்கள் வெளியீடு இல்லை: விநியோகஸ்தர்கள் முடிவு

By செய்திப்பிரிவு

மார்ச் 27-ம் தேதிக்குப் பிறகு புதிய படங்களின் வெளியீடு இல்லை என்று விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் திரு. டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், கோவை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் துணைத் தலைவர் பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கச் செயலாளர் சாகுல் அமித் மற்றும் தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட 2 புதிய தீர்மானங்கள்

1. விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவேடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் TDS வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.

2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE