தனுஷ் படத்தில் இணைந்த மலையாள எழுத்தாளர்கள்

By செய்திப்பிரிவு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் 'வரதன்' பட எழுத்தாளர்கள் இணைந்துள்ளனர்.

'மாஃபியா' படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் நரேன். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தப் படத்துக்காக 2 பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் ஷர்ஃபு மற்றும் சுகாஸ் ஆகிய இரண்டு மலையாள எழுத்தாளர்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'வைரஸ்' மற்றும் 'வரதன்' ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மே மாதம் முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. தனுஷுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

தற்போது 'அத்ரங்கி ரே' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் தனுஷ். அதனை முடித்துவிட்டு 'கர்ணன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்தே கார்த்திக் நரேன் படத்தின் படப்பிடிப்பை தனுஷ் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE