பல்வேறு படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கல்யாணி, தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
மலையாளத் திரையுலகில் அறிமுகமானாலும், தமிழில் 'கண்ணுக்குள் நிலவு', 'சமுத்திரம்' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் கல்யாணி. பல்வேறு விருதுகளை வென்றுள்ள கல்யாணி, தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நான் நடிகை காவேரி (எ) கல்யாணி. இதுவரை எனக்கு அன்பும் பேராதரவும் அளித்துக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிக-நடிகையர், ஊடக நண்பர்கள், மக்கள் தொடர்பாளர்கள், நலம் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும், இத்தருணத்தில் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘K2K புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில், ஒரு இயக்குநர் - தயாரிப்பாளராக நான் அடியெடுத்துவைக்கும் இந்தப் புதிய முயற்சிக்கும் உங்களது அன்பும் ஆதரவும் நல்குமாறு வேண்டுகிறேன். ‘K2K புரொடக்ஷன்ஸ்’ சார்பாக எங்களது முதல் தயாரிப்பாக, தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் த்ரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம்”
இவ்வாறு கல்யாணி தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, இயக்குநர் கவுதம் மேனன் தனது ட்விட்டர் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.