பிஸியான நடிகரான தயாரிப்பாளர்: இயக்குநர் கிண்டல்

By செய்திப்பிரிவு

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பல்வேறு படங்களில் நடித்து வருவதை, இயக்குநர் நவீன் கிண்டல் செய்துள்ளார்.

'ஆரோகணம்', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'பரதேசி', 'தங்க மீன்கள்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ஜே.சதீஷ் குமார். தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்குத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறார்.

இதனிடையே, சில மாதங்களாக தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் ஜே.சதீஷ் குமார். 'அக்னிச் சிறகுகள்', 'கபடதாரி', 'பிரண்ட்ஷிப்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் 'பிரண்ட்ஷிப்’படத்தில் இவர் ஒப்பந்தமாகியிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது படக்குழு.

இதனைக் குறிப்பிட்டு 'அக்னிச் சிறகுகள்' இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பதிவில் "இன்று படுபிஸியான நடிகராக உருவெடுத்திருக்கும் ஜே.சதீஷ் குமார், எங்களுடைய 'அக்னிச் சிறகுகள்' படப்பிடிப்பிற்குத் தேதி கொடுக்க முடியாமல் தினமும் ஒரு ஷூட்டிங்கிற்கு பறந்து கொண்டிருக்கிறார். தயாரிப்பாளராக வெற்றிக்கொடி நாட்டிய தாங்கள் நடிகராக விஸ்வரூபமெடுப்பதில் மிக்க மகிழ்ச்சி." என்று தெரிவித்துள்ளார்.

நவீன் கோபத்தில் தெரிவித்துள்ளாரா என்று விசாரித்தபோது, கிண்டலாக குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவித்தது படக்குழு. 'அக்னிச் சிறகுகள்' படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE