'திரௌபதி' படத்தைப் பாருங்கள்: பா.இரஞ்சித்துக்கு இயக்குநர் திடீர் அழைப்பு 

By செய்திப்பிரிவு

'திரௌபதி' படத்தைப் பாருங்கள் என்று இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு ஜேஎஸ்கே கோப் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் மோகனும் இதே வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

‘பழைய வண்ணாரப் பேட்டை’ படத்தை அடுத்து ‘திரௌபதி’ படத்தை இயக்கினார் மோகன்.ஜி. ரிச்சர்ட் ரிஷி, ஷீலா நடித்த இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. கூட்டு நிதி (Crowd Funding) முறையில் மக்களிடம் பணம் வசூலித்து எடுக்கப்பட்ட இப்படம் பலத்த சர்ச்சைகளையும், இன்னொரு பக்கம் வரவேற்பையும் பெற்று வருகிறது.

கலவையான விமர்சனங்களைப் படம் பெற்று வரும் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஜேஎஸ்கே கோபி, 'திரௌபதி' படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ''சகோதரர் பா.ரஞ்சித் அவர்களுக்கு. நீங்கள் #திரெளபதி படத்தை பார்க்க வர வேண்டும். உங்களை திரெளபதி படம் பார்க்க வைக்க முயற்சிகள் செய்தேன். ஆனால் உங்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் ட்விட்டர் மூலமாக அழைப்பு விடுக்கிறேன். அனைவரும் சமம் என்ற அம்பேத்கர் அவர்களின் வார்த்தையை உண்மையாக்க நீங்கள் திரெளபதி படத்தை பார்க்க வேண்டும் என்பது என் ஆசை'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE