ரத்தம் கொட்டிய நிலையிலும் நடித்த அருண் விஜய்: ஜி.என்.ஆர்.குமாரவேலன் ஆச்சரியம்

ஒரு ஆக்‌ஷன் காட்சியை எடுத்துக்கொண்டிருக்கும்போது அருண் விஜய்க்கு அடிபட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ஆனால், கொஞ்சம் கூட அதனைப் பொருட்படுத்தாமல் உடனே தயாராகி அந்தக் காட்சியில் நடித்து முடித்தார் என்று ஜி.என்.ஆர்.குமாரவேலன் ஆச்சரியத்துடன் கூறினார்.

ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பல்லக் லால்வாணி, காளி வெங்கட் நடிப்பில் உருவாகி வரும் படம் சினம். இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் அருண் விஜய். ஷபீர் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய் தந்தை விஜயகுமாரே தயாரித்து வருகிறார்.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் கூறியதாவது:

''நடிகர் அருண் விஜய்யின் ஒத்துழைப்பு இல்லையெனில் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவர் தற்போது தொடர் வெற்றிகளுடன், ஒரே கட்டமாக பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸான 'மாஃபியா' படத்தின் வெளியீட்டுப் பணிகளுக்கும் அவர் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஆனால் இத்தனை பணிகளுக்கு மத்தியிலும் இப்படத்திற்கு நேரம் ஒதுக்கி, சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க பெரும் ஆதரவாக இருந்தார்.

இத்தனை படங்களில் நடித்தாலும் அவர் தனது கதாபாத்திரத்திற்கு தரும் உழைப்பு, அர்ப்பணிப்பு பிரமிப்பைத் தந்தது. ஒரு ஆக்‌ஷன் காட்சியை எடுத்துக்கொண்டிருக்கும்போது அருண் விஜய்க்கு அடிபட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ஆனால், கொஞ்சம் கூட அதனைப் பொருட்படுத்தாமல் உடனே தயாராகி அந்தக் காட்சியில் நடித்து முடித்தார்.

நம்பிக்கை மற்றும் உழைப்பின் வழியாக அவர் இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரிது. அதற்கு முற்றிலும் தகுதியானவர் அவர். படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த மாத இறுதியில் படத்தின் டீஸரை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்''.

இவ்வாறு ஜி.என்.ஆர்.குமாரவேலன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE