மகேஷ்பாபு தயாரிக்கும் படத்தில் பொன்னியின் செல்வன் நடிகை

மகேஷ்பாபு தயாரிக்கும் படத்தில் நடிகை சோபிதா துலிபலா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

என்.எஸ்.ஜி பிரிவு கமாண்டோவாக இருந்த சந்தீப் உன்னிகிருஷ்ணன், 26/11 மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தார். இவரது வாழ்க்கைக் கதை 'மேஜர்' என்ற பெயரில் தெலுங்கு மற்றும் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு முதன் முதலில் தயாரிக்கும் திரைப்படம் இது. 'கூடாச்சாரி' படத்தை இயக்கிய சஷி கிரண் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் அடிவி சேஷ் நாயகனாக நடிக்கிறார்.

இந்தியில் 'ராமன் ராகவ்', 'தி பாடி', தெலுங்கில் 'கூடாச்சாரி', மலையாளத்தில் 'மூத்தோன்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சோபிதா துலிபலா, 'மேஜர்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய சோபிதா, "மேஜர் திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் விரிவாக, நேர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனது முதல் தெலுங்குப் படமான 'கூடாச்சாரி' வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போதும் மீண்டும் அதே கூட்டணியுடன் மேஜர் மாதிரியான ஒரு படத்தில் இணைவது இரட்டை மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.

சோபிதா, மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE