‘நீங்கள்தான் காரணம் அப்பா’ - விக்ரம் குறித்து துருவ் உருக்கம்

தனது தந்தை விக்ரம் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை துருவ் விக்ரம் வெளியிட்டுள்ளார்.

கிரிசாயா இயக்கத்தில் த்ருவ் விக்ரம், பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஆதித்ய வர்மா'. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காகும்.

தமிழில் இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்தப் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் தன்னை நாயகனாக நிலை நிறுத்தியுள்ளார் துருவ் விக்ரம்.

இந்த நிலையில் துருவ் விக்ரம் தனது தந்தை விக்ரம் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார். அதோடு 'ஆதித்ய வர்மா' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் துருவ் விக்ரம் கூறியுள்ளதாவது:

''இப்போது என்னால் லட்சக்கணக்கான மக்கள் முன்பு பேச முடிகிறதென்றால், அதற்கு ஒரு மனிதனின் இடைவிடாத உழைப்பும் அனைத்துத் தடைகளையும் தாண்டி இப்படத்தை எடுக்க வேண்டும் என்ற உறுதியும் மட்டுமே காரணம். நான் நம்பிக்கை இழக்கும்போதுகூட எனக்கு வழிகாட்டினார்.

வாழ்க்கை என் மீதே சந்தேகம் கொள்ள வைக்கும்போதும், விளிம்பை நோக்கித் தள்ளும்போதும், எதையும் திரும்பிப் பார்க்காமல் உழைக்க முடிவெடுத்துவிட்டால் எதுவும் சாத்தியமே என்று புரியவைத்தார். 'ஆதித்ய வர்மா' உருவாக நீங்கள்தான் காரணம் அப்பா. அது ஒரு ரீமேக் படமாக இருக்கலாம். ஆனால் இது எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமான படமாக இருக்கும். ஏனென்றால், இதன் உருவாக்கம் முழுக்கவும் எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து யாருடைய ரசிகனாக இருந்தேனோ, அவரிடமிருந்து நடிப்பைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது நீங்கள் தான்.

உங்களுடைய தொலைநோக்குப் பார்வைதான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. நமது கனவுகளை நனவாக்க கடினமாக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன். உங்களைப் போன்ற ஆளுமையாக என்னால் முடியாது என்பது எனக்குத் தெரியும், ஆனால் அதை நான் ஒரு பெருமையுடனே சொல்கிறேன். மீண்டும் ஒரு லட்சக்கணக்கான முறை நன்றி சொல்கிறேன்''.

இவ்வாறு துருவ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE