அதிக கதாபாத்திரங்களைக் கொண்டு மீண்டும் 'ஒத்த செருப்பு' உருவாகுமா என்ற ரசிகரின் கேள்விக்கு பார்த்திபன் பதிலளித்துள்ளார்
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகினரும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.
இந்தப் படத்தின் இந்தி மற்றும் ஹாலிவுட் ரீமேக் தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதன் இந்தி ரீமேக்கில் நடிக்க நவாசுதீன் சித்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பார்த்திபன். தற்போது 'துக்ளக் தர்பார்' படத்தில் நடித்துக்கொண்டே தனது அடுத்த படத்துக்கான திரைக்கதையை இறுதி செய்து வருகிறார்.
எப்போதுமே தனது ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் பார்த்திபன். அதில் ஒருவர் " 'ஒத்த செருப்பு' படத்தை மீண்டும் நிறைய கதாபாத்திரங்களை வைத்து எடுங்கள். கண்டிப்பாக பெரும் வெற்றி பெரும்" என்று பார்த்திபனைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். அதற்கு பார்த்திபன், "நான் ever ready. தயாரிக்க எவர் ready?" என்று பதிலளித்துள்ளார்.