நான் கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டேன்: நஸ்ரியா

By செய்திப்பிரிவு

நான் கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டேன் என்றும், அதனால் தான் பெரிய இடைவெளி விடுவதாகவும் நஸ்ரியா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அன்வர் ரசீத் இயக்கி, தயாரித்து வெளியாகியுள்ள படம் 'ட்ரான்ஸ்'. ஃபகத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன், விநாயகன், செம்பியன் வினோத் ஜோஸ், திலீஸ் போத்தன், ஜுன் ஜோசப் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம், போதிய வரவேற்பைப் பெறவில்லை.

'பெங்களூர் டேஸ்' படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் தன் கணவர் ஃபகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார் நஸ்ரியா. மேலும், 2018-ம் ஆண்டு வெளியான 'கூடே' படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் தான் நடித்துள்ளார். 'ட்ரான்ஸ்' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ஏன் திரையுலகில் பெரிய இடைவெளி விடுகிறேன் என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார் நஸ்ரியா.

பெரும் இடைவெளி விடுவது தொடர்பாக நஸ்ரியா கூறியிருப்பதாவது:

நான் கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டேன் அவ்வளவே. ஒரு படம் நடிப்பேன், நான்கு வருடங்கள் கழித்து அடுத்த படம் நடிக்கக் காத்திருப்பேன் என்றெல்லாம் இல்லை. ’கூடே’வுக்குப் பிறகு இரண்டு வருட இடைவெளியையும் நான் தீர்மானிக்கவில்லை. ஒரு கதை என்னை ஆர்வப்படுத்தினால், நேரத்தில் பொருந்தினால், இதை நடிக்க வேண்டும் என்று யோசிக்க வைத்தால் நடிப்பேன்.

‘கூடே’, ’ட்ரான்ஸ்’ இரண்டும் அப்படியான கதைகள். இத்தனைக்கும் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடந்தன. ட்ரான்ஸ் முடிய சில காலம் ஆனது. நான் ஒரு கதை கேட்கும்போது ஆழமாக யோசிக்க மாட்டேன். இது எனக்கு ஆர்வம் தருமா, தராதா என்றே யோசிப்பேன். அளவுக்கதிகமாக யோசிப்பதில்லை.

’ட்ரான்ஸ்’ படத்தில் எஸ்தர் கதாபாத்திரம் புகை பிடிப்பாள், குடிப்பாள் ஆனால் நிஜத்தில் நான் ’பெங்களூர் டேஸ்’ திவ்யா கதாபாத்திரத்தைப் போல. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் 'நீங்கள் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும்' என்பார்கள். படம் பார்ப்பவர்களுக்கு நான் கத்துக் குட்டி போலத் தெரிய விரும்பவில்லை. அதனால் நான் அவற்றைக் கற்றுக் கொண்டேன்.

என் அப்பா, காதுகள் வழியாகவும் புகை வரும்படி பிடிக்கிறாயா என்று கேட்டார். இந்த கதாபாத்திரம் போல எனக்கு யாரும் தெரியாது. அதனால் இயக்குநரிடம் அதைப் பற்றிக் கேட்டேன், அவளது முதிர்ச்சி, எது அவளை இப்படி ஆக்கியது எல்லாம் தெரிந்து கொண்டேன்.

இவ்வாறு நஸ்ரியா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE