'சூரரைப் போற்று' படத்தின் சூர்யாவின் கதாபாத்திரத்துக்கு வழிகாட்டியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மோகன் பாபு
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட், கருணாஸ், பரேஸ் ராவல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. சூர்யாவின் 2டி நிறுவனமும், குனீத் மோங்காவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. விரைவில் படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கவுள்ளன. இதனிடையே, இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதில் மோகன் பாபுவின் கதாபாத்திர பின்னணி என்ன என்பதை படக்குழு அறிவித்துள்ளது. இதில் 'மாறா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூர்யா. அந்தக் கதாபாத்திரத்துக்கு வழிகாட்டியாக இருக்கும் மிக முக்கியமான பக்தவச்சலம் நாயுடு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மோகன் பாபு என படக்குழு தெரிவித்துள்ளது.
இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், மோகன் பாபுவின் உண்மையான பெயர் பக்தவச்சலம். அவருடைய நிஜ கதாபாத்திரத்தின் பெயரிலேயே இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதற்காக அவருடைய மகள் லட்சுமி மஞ்சு தனது ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.