அன்பும் ஊக்கமும் இல்லையென்றால் நடந்திருக்காது: யுவன் நெகிழ்ச்சி

அன்பும் ஊக்கமும் இல்லையென்றால் 23 ஆண்டுகள் கடந்திருக்காது என்று இசையமைப்பாளர் யுவன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

1997-ம் ஆண்டு டி.நாகராஜன் இயக்கத்தில் சரத்குமார், நக்மா, பார்த்திபன், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அரவிந்தன்'. டி.சிவா தயாரித்த இந்தப் படத்தின் மூலமாகத்தான் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இன்றுடன் (பிப்ரவரி 28) யுவன் சங்கர் ராஜா திரையுலகில் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆகின்றன. இதனால், பலரும் யுவனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். மேலும், அவருடைய இசை ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #23yearsofYuvan மற்றும் #23YearsofYuvanism ஆகிய ஹேஷ்டேகுகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த ஹேஷ்டேகுகளில் யுவனின் இசை தொடர்பாக நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். பலருடைய வாழ்த்து, ட்விட்டர் ட்ரெண்ட் உள்ளிட்டவை தொடர்பாக யுவன் தனது ட்விட்டர் பதிவில், "இத்தனை ஆண்டுகளாக உங்களுடைய அன்பும், ஊக்கமும் இல்லையென்றால் இது நடந்திருக்காது. உங்கள் அன்பு மட்டுமே என்னை உயரத்திற்குச் செல்ல ஊக்கப்படுத்தியது. இன்னும் செல்வேன். என்னுடைய இதயம் அன்பினாலும் நன்றியுணர்வாலும் நிரம்பியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

தற்போது யுவன் இசையில் 'மாமனிதன்', 'குருதி ஆட்டம்', 'வலிமை', 'டிக்கிலோனா', 'ஜன கன மண', 'பொம்மை', 'சக்ரா' உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE