'பாக்ஸர்' படப்பிடிப்பு எப்போது? - அருண் விஜய் தகவல்

'பாக்ஸர்' படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு அருண் விஜய் பதிலளித்துள்ளார்.

’தடம்’ படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் 'அக்னிச் சிறகுகள்', 'மாஃபியா', 'சினம்' மற்றும் 'பாக்ஸர்' ஆகிய படங்கள் தொடங்கப்பட்டன. இதில் 'மாஃபியா' படம் வெளியாகிவிட்டது. 'அக்னிச் சிறகுகள்' மற்றும் 'சினம்' ஆகியவை தயாரிப்பில் உள்ளன.

ஆனால், 'பாக்ஸர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்றது. அதன் படப்பூஜை கூட முடிந்தாலும், படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ரித்திகா சிங் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிப்பதற்காக மலேசியா மற்றும் வியட்நாமில் குத்துச்சண்டை பயிற்சி பெற்றுள்ளார் அருண் விஜய். சண்டைப் பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன், அருண் விஜய்க்குப் பயிற்சி அளித்துள்ளார்.

ஆனால், 'பாக்ஸர்' படப்பிடிப்பு ஏன் தொடங்கப்படவில்லை என்று அருண் விஜய்யிடம் கேட்ட போது, "4 படத்துக்கான உழைப்பைக் கொடுக்க வேண்டிய படம். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ரொம்பவே கடினமான, எமோஷனலான படம். அதற்காக உடல்ரீதியாக முழுமையாகத் தயாரானேன். படத்தில் 3 வித்தியாசமான உடலமைப்புகள் உள்ளன.

இந்த தருணத்தில் ஒரு உடலமைப்பில் படப்பிடிப்புக்குப் போக வேண்டும். அதற்கு, தயாரிப்பு தரப்பிலிருந்தும் ஒத்துழைப்பு வேண்டும். அந்தப் படம் தொடங்கப்பட்டால் சரியாக ஷூட்டிங் போய் முடிக்க வேண்டும். அதற்காகத் தயாரிப்பு நிறுவனம் தயாரானால் அந்தப் படம் தொடங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார் அருண் விஜய்.

லண்டனைச் சேர்ந்த மார்கஸ் லுஜுங்பெர்ன் ஒளிப்பதிவாளராகவும், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பாளராகவும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE