ப்ரியாமணி விலகல்: சசிகலாவாக நடிக்கவே பூர்ணா ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'தலைவி' படத்தில் சசிகலாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ப்ரியாமணி விலகவே, பூர்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 'தலைவி' என்ற பெயரில் உருவாகி வருகிறது. விஷ்ணு இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தை ஏ.எல்.விஜய் இயக்க, கங்கணா ரணாவத் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

இதில் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடித்து வருகிறார். சசிகலாவாக நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரியாமணி ஒப்பந்தமானார். ஆனால், இந்தியில் அஜய் தேவ்கனுடன் 'மைதான்' மற்றும் 'அசுரன்' தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ப்ரியாமணி.

இந்தப் படங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதிகளிலேயே, 'தலைவி' படப்பிடிப்பும் இருந்ததால் விலகிவிட்டார். தற்போது இவருக்குப் பதிலாக பூர்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இவருடைய காட்சிகள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.

எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகும் இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக விஷால் விட்டல் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE