மாதவன் நாயகனாக நடிக்க 'மாறா' என்ற தலைப்பில், 'சார்லி' ரீமேக் தயாராகி வருகிறது.
2015ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியான மலையாளப் படம் 'சார்லி'. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கினார். ஃபைண்டிங் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.
மலையாளத்தில் இப்படத்துக்கு இளைஞர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்தி திரையுலகில் பிரபல நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ் 'சார்லி' ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது. இதில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் மாதவன், பார்வதி கதாபாத்திரத்தில் பார்வதியே நடிக்க ஏ.எல்.விஜய் இயக்குவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த ரீமேக் பணிகள் தாமதமானதால் 'தலைவி' படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார். இதனால் 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவின. ஆனால், அதில் உண்மையில்லை. தற்போது பிரமோத் பிலிம்ஸ் தயாரிப்பில் மாதவன் நடித்து வரும் 'மாறா' படம் 'சார்லி' ரீமேக் தான் என்கிறார்கள்.
இதில் பார்வதி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், முக்கிய கதாபாத்திரத்தில் ஷிவதா நாயர், மெளலி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். திலீப் குமார் இயக்கி வருகிறார். விரைவில் இந்தப் படம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.