படத்தை இயக்குவதில் ஏ.ஆர்.முருகதாஸ் தாமதம் - சிவகார்த்திகேயன் வருத்தம்

By ஸ்டார்க்கர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால், சிவகார்த்திகேயன் வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த படப்பிடிப்புக்கு இடையே, சல்மான்கான் நடிக்கும் படத்தையும் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்பந்தமானார். ‘சிக்கந்தர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. ஏ.ஆர்.முருகதாஸ், இரண்டு படங்களையும் மாறி மாறி இயக்கி வந்தார்.

தற்போது சல்மான்கான் தொடர்ச்சியாக தேதிகள் கொடுத்ததால், ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கவனம் செலுத்தி வருகிறார். இதனால், சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தை தொடங்கும் திட்டத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

இதனால், ஏ.ஆர்.முருகதாஸுக்கு உதவ சென்று நமது நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தத்தில் சிவகார்த்திகேயன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போதைய தாமதத்தினால் படத்தை அடுத்த ஆண்டு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE