சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தின் கதைக் களம் குறித்து தெரியவந்துள்ளது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியானதுடன், இசை வெளியீட்டு நிகழ்வும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இந்நிலையில், வெளிநாடு டிக்கெட் புக்கிங் செயலியில் ‘வேட்டையன்’ படத்தின் ‘சினாப்சிஸ்’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன் விவரம்: “கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் என்கவுன்டர் செய்துவிட, அது அவருக்கு பெரும் தலைவலியாக மாறிவிடுகிறது. அதாவது, அந்த காவல் அதிகாரி தான் செய்த என்கவுன்டர் குறித்த விசாரணைக்கு ஆளாக்கப்படுகிறார். ஒருபுறம் என்கவுன்டருக்கு சட்டப்படி காரணம் சொல்ல வேண்டும், மறுபுறம் ஊழல்வாதிகளை எதிர்த்து களமாட வேண்டும். இந்நிலையில், இதனை எதிர்த்து போராடி அவர் எப்படி மீண்டார் என்பதை சொல்கிறது படம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘வேட்டையன்’ படத்தில் அமிதாப் பச்சன், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.