சென்னை: ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. கடும் எதிர்மறை விமர்சனங்களை பெற்று, படமும் தோல்வியை தழுவியது. தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் ‘இந்தியன் 3’ படத்தின் பணிகளை நிறுத்தி வைத்துவிட்டார் ஷங்கர். இப்போது முழுமையாக ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பணிகளை கவனித்து வருகிறார். இதில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதுவும் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், எடிட்டராக ஷமீர் முகமது ஆகியோர் பணிபுரிந்து வந்தார்கள்.
தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் எடிட்டராக ரூபன் பணிபுரிந்து வருகிறார். அவரே இனி எடிட்டராக இருப்பார் என கூறப்படுகிறது. பல்வேறு முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தது மட்டுமன்றி, பல படங்களுக்கு ட்ரெய்லர் பணிகளில் மட்டும் பணிபுரிந்தவர் ரூபன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முழுமையாக கிராபிக்ஸ் பணிகளை கவனித்து வருகிறார் ஷங்கர். அந்தப் பணிகள் முடிந்து, விரைவில் படத்தின் முதல் பிரதியை எடுத்துக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார். டிசம்பரில் படத்தினை வெளியிடுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.