‘விஜய் 69’ பட அப்டேட் நாளை வெளியீடு: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய்யின் 69-வது படத்தின் அப்டேட் சனிக்கிழமை (செப்.14) மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘தி கோட்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் 69ஆவது படமான இதனை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அப்டேட் இன்று (செப்.13) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அது கிட்டத்தட்ட விஜய்யின் ஃபேவர்வெல் (farewell) வீடியோ. அந்த வீடியோவில் பொதுமக்கள் சிலர் விஜய்யின் கடைசி படம் இது என்பதால் உருக்கத்துடன் பேசுகின்றனர். நடுநடுவே விஜய்யின் படங்களின் காட்சிகள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் ‘விஜய் 69’ படத்தின் அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் 69 படம் குறித்த தகவல்: ’விஜய் 69’ படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் சிம்ரன் மீண்டும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், இதில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களும் முடிவாகிவிட்டது. இதன் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், எடிட்டராக பிரதீப்.இ.ராகவ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. முழுநேர அரசியலுக்குள் நுழையும் முன் விஜய் நடிக்கவுள்ள கடைசி படம் இது என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. விரைவில் படப்பூஜை நடத்தி படப்பிடிப்பு தொடங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் பணிகளை முடிக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதற்கு தகுந்தாற் போல் படக்குழுவினரும் பணிகளை விரைந்து முடிக்க பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE