வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘சூர்யா 44’ படக்குழு!

By ஸ்டார்க்கர்

நடிகர் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 44’ படம் குறித்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படக்குழு. ‘கங்குவா’ படத்தினைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இதில் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படாமல் ‘சூர்யா 44’ என அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் நடிக்க பிரசாந்த் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்யும் விதமாக, காளிதாஸ் ஜெயராமும் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தினை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இது தொடர்பாக விசாரித்த போது, பிரசாந்த் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவரும் ‘சூர்யா 44’ படத்தில் நடிக்கவில்லை. எப்படி இந்த மாதிரி தகவல் வெளியானது என தெரியவில்லை. இதில் ஜெயராம் நடித்திருப்பது உண்மை. அதனை நாங்களே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறோம். இந்த படத்தில் ஜெயராமின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது அவருடைய மகன் காளிதாஸ் ஜெயராமும் வந்திருந்தார். அப்போது சூர்யாவுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். மற்றபடி அவர் படத்தில் எல்லாம் நடிக்கவில்லை என்ற தகவல் படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ‘சூர்யா 44’ படம் தொடர்பாக இணையத்தில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE