தீராத தனுஷ் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கம் ‘முடிவு’ என்ன?

By ஸ்டார்க்கர்

தீராத பிரச்சினையாக நீடித்து வந்த நடிகர் தனுஷ் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

தேனாண்டாள் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் படமொன்று தொடங்கப்பட்டது. ஆனால், அந்தப் படம் தொடர்ச்சியாக நடைபெறாமல் கைவிடப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் அந்தச் சமயத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கதிரேசன் தயாரிப்பில் படமொன்றில் நடிக்க அட்வான்ஸ் தொகையை பெற்றிருந்தார் தனுஷ்.

இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டுதான் மீதி படங்களில் நடிக்க வேண்டும் என்று தனுஷுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் கொடுத்தது. இது தொடர்பாக நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் தேனாண்டாள் நிறுவனத்துக்கு படம் இயக்கி தருவதாகவும், கதிரேசனிடம் வாங்கிய தொகையினை வட்டியுடன் திரும்ப அளிக்கவும் தனுஷ் சம்மதம் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு இடையே, ஆகாஷ் தயாரிப்பில் புதிய படமொன்றில் இயக்கி நடிக்க தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்புக்கு பெப்சி தொழிலாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தனுஷ் விவகாரம் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம், பெப்சி அமைப்பு என கூட்டாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன் முடிவில் நேற்றைய படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்தப் படத்தினை நிறுத்த வேண்டாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தனுஷ் விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. தனுஷ் விவகாரம் மட்டுமன்றி இதர நடிகர்கள் இனிமேல் அட்வான்ஸ் தொகையை பெற்றுக்கொண்டு படம் நடிக்காமல் இருப்பது தொடர்பாகவும் விவாதிக்க இருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE