“என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?” - ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து அரசுக்கு கேரள ஐகோர்ட் சரமாரி கேள்வி 

By செய்திப்பிரிவு

கொச்சி: ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கேரள அரசை சாடியுள்ள கேரள உயர்நீதிமன்றம், ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடவடிக்கை கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் இன்று (செப்.10) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஏகே ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக கேரள அரசை சாடியது. “ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த 2021-ம் ஆண்டே காவல்துறை தலைவரிடம் சமர்பிக்கப்பட்ட போதிலும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசின் இந்த செயலற்ற தன்மை அதிர்ச்சி அளிக்கிறது.

இப்படியான ஒரு பிரச்சினை இருப்பதை ஹேமா அறிக்கை வெளிப்படுத்திய பின்பு, இது குறித்து அரசு எடுத்திருக்கும் குறைந்தபட்ச நடவடிக்கை என்ன? திரையுலகில் மட்டுமல்லாமல், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்ன செய்துள்ளீர்கள்?. பெண்கள் அதிகம் வசிக்கும் நம்மை போன்ற ஒரு மாநிலத்தில் இப்படியான நிலைமை கவலையளிக்கிறது. பெரும்பான்மையான மக்கள் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொள்ளும்போது நீங்கள் மவுனம் காப்பது ஏன்?” என சரமாரியாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசு தரப்பில் சிறப்பு புலனாய்வு குழு இன்னும் முழுமையாக ஹேமா கமிட்டி அறிக்கையை பார்க்கவில்லை என தெரிவித்தது. இதையடுத்து நீதிபதிகள், “ஹேமா கமிட்டியின் திருத்தப்படாத மொத்த அறிக்கையும், சிறப்பு புலனாய்வு குழுவிடம் அரசு ஒப்படைக்க வேண்டும். அதனடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE