ரஜினியின் ‘வேட்டையன்’ முதல் சிங்கிள் எப்படி? - ஈர்க்கும் மலேசியா வாசுதேவனின் ஏஐ குரல்

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தின் முதல் சிங்கிளான ‘மனசிலாயோ’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாடல் எப்படி? - அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் வரிகளை சூப்பர் சுப்பு, விஷ்ணு எடவன் இணைந்து எழுதியுள்ளனர். யுகேந்திரன், அனிருத், தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ள இப்பாடலின் ஸ்பெஷல் என்னவென்றால், மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர். பாடல் மலையாளம் - தமிழ் கலந்த குத்துப்பாடலாக உருவாகியுள்ளது.

குறிப்பாக, மலேசியா வாசுதேவன் குரல் ஒலிக்கும் இடங்கள் மிகவும் நேர்த்தியாகவும் நிஜத்துக்கு நெருக்கமாக அமைந்துள்ளன. அவர் குரல் ஒலிக்கும்போது, பழைய ரஜினி கண் முன் வந்து செல்கிறார். “சேட்டன் வந்தல்லே, சேட்ட செய்ய வந்தல்லே, பேட்ட துல்லான் வந்தல்லே, வேட்டையனல்லே” போன்ற வரிகள் கவனம் பெறுகின்றன. திரையரங்கில் ‘வைப்’ ஏற்படுத்தும் இப்பாடலில் மஞ்சுவாரியர் நடனத்தில் மிரட்டியுள்ளார்.

வேட்டையன்: தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சிங்கிள் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE