விஜய்யின் ‘தி கோட்’ 4 நாட்களில் ரூ.288 கோடி வசூல்!

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) திரைப்படம் 4 நாட்களில் உலக அளவில் ரூ.288 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி எனக் கூறப்படுகிறது. இப்படம் முதல் நாள் ரூ.126.32 கோடியை வசூலித்தது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் பெரும்பாலான திரையரங்குகளில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில், படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.288 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஓடிடியில் கூடுதல் காட்சிகள்: ஓடிடியில் மூன்றரை மணி நேரம் ஓடக்கூடிய படமாக ‘தி கோட்’ இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் விஜய் சென்றவுடன் சிவகார்த்திகேயன் - மோகன் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் காட்சியும் ஓடிடியில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு. இதன்மூலம் ஓடிடி வெளியீட்டிலும் பார்வையாளர்கள் மீண்டுமொரு முறை பார்க்க வைக்க ‘தி கோட்’ படக்குழு புதிய யுக்தியை கையிலெடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE