ஆந்திரா, தெலங்கானாவுக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தலா ரூ.50 லட்சம் மழை நிவாரண நிதி!

By செய்திப்பிரிவு

அமராவதி: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகளின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என நடிகர் ஜூனியர் என்டிஆர் அறிவித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆந்திராவில் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ஆந்திரா, தெலங்கானா இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரத்திலிருந்து மக்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன். வெள்ள மீட்பு பணிகளுக்காக இரண்டு மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு உதவும் வகையில், எனது பங்களிப்பாக 2 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ரூ.25 லட்சத்தை ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE