மலையாள இயக்குநர் மீது வங்க மொழி நடிகை புகார்

By செய்திப்பிரிவு

பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும் மாநில அரசால் நடத்தப்படும் கேரள கலாசித்ரா அகாடமியின் சேர்மனுமான ரஞ்சித் மீது வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, இயக்குநர் ரஞ்சித், ‘பலேரிமாணிக்யம்: ஒரு பதிரகோலபதக்கத்தின்டே கதா’ என்ற படத்தை 2009-ம் ஆண்டு இயக்கினார். அந்தப் படத்துக்காக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அவரைச் சந்தித்தேன். என்னுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ரஞ்சித் என் பின்னால் நின்று கொண்டிருந்தார்.

அவர் என் உடலைத் தொட்டு கைவளையல்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். எனக்குச் சங்கடமாக இருந்தது. அவர் என் கழுத்து, தலைமுடியை தொட முயற்சித்தார். பிறகு அங்கிருந்து வெளியேறிவிட்டேன். இது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. திரைப்படத் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது எனக்குத் தெரியும். இங்கு நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீலேகா மித்ராவின் புகாரை இயக்குநர் ரஞ்சித் மறுத்துள்ளார். “அவர் ஆடிஷனுக்காக வந்தார். அவர் நடிப்பு சிறப்பாக இல்லை. அதை அவரிடம் தெரிவித்தோம். அவ்வளவுதான். அவர் கூறிய எதுவும் நடக்கவில்லை. இப்போது அவர் சர்ச்சையை ஏற்படுத்துவதின் பின்னணியில் மறைமுக நோக்கம் இருக்கிறது. அவர் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு அணுகினால் அதே வழியில் எதிர்கொள்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE