ஹைதராபாத்: ‘கல்கி 2898 ஏடி’ படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்ஸி, “இந்தப் படத்தில் பிரபாஸ் ஒரு ஜோக்கர் போல இருந்தார்” என விமர்சித்தார். இதற்கு தற்போது படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “மீண்டும் பழங்காலத்துக்கு திரும்ப வேண்டாம். இனியும் வடக்கு - தெற்கு, பாலிவுட் vs டோலிவுட் என பேச வேண்டாம். இந்திய திரைத் துறை என்ற ஒற்றை குடையின் கீழ் அனைவரும் ஒன்றிணைவோம். நடிகர் அர்ஷத் தான் பேசும் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். இருந்தாலும் பரவாயில்லை. அவரது குழந்தைகளுக்கு ‘புஜ்ஜி’ பொம்மையை அனுப்பி வைக்கிறேன். படத்தின் அடுத்த பாகத்தில் பிரபாஸ் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை அர்ஷத் உணரும் வகையில் கடுமையாக உழைப்பேன்” என தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சொன்னது என்ன? - நடிகர் அர்ஷத் வார்ஸி அண்மையில் அளித்த பேட்டியில், “கல்கி’ படம் பார்த்தேன். எனக்கு அப்படம் பிடிக்கவில்லை. அமிதாப் பச்சனை என்ன சொல்வது. என்னால் அந்த மனிதரை புரிந்துகொள்ள முடியவில்லை. பிரபாஸை பற்றி சொல்ல வேண்டுமென்றால், எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு ஜோக்கர் போல இருந்தார். ஏன் அப்படி? நான் ஒரு ‘மேட் மேக்ஸ்’ போன்ற படத்தை காண விரும்பினேன். மெல் கிப்ஸன் படத்தை பார்க்க விரும்பினேன். ஆனால் நீங்கள் என்ன எடுத்து வைத்திருக்கிறீர்கள்? எனக்கு புரியாத விஷயங்களை ஏன் அவர்கள் செய்கிறார்கள்?” என்று விமர்சித்தார்.