“என்னுடைய உச்சபட்ச கண்ணீர் இந்த படம்” - ‘வாழை’ குறித்து மாரி செல்வராஜ் உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “என்னுடைய உச்சபட்ச கண்ணீர் என்றால் அது ‘வாழை’ தான். என்னதான் இவனுக்கு பிரச்சினை என்று நினைப்பவர்களுக்கு நானே என்னை பற்றி சொல்கிறேன் என்று எடுத்தப் படம்தான் இது” என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த ‘வாழை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது: “வாழை’ படத்துக்குப் பிறகு நான் என்னுடைய ‘பெஸ்ட்’ ஆக ஒரு படம் பண்ணாலும் நான் ‘வாழை’ படத்தைத்தான் என்னுடைய சிறந்த படமாக பார்ப்பேன். என்னுடைய உச்சபட்ச கண்ணீர் என்றால் அது ‘வாழை’ தான்.

என்னதான் இவனுக்கு பிரச்சினை என்று நினைப்பவர்களுக்கு நானே என்னை பற்றி சொல்கிறேன் என்று எடுத்தப் படம்தான் இது. என்னுடைய வலியை, என்னுடைய பரிதவிப்பை, என்னுடைய அழுகையை நான் என் இயக்குநர் ராமிடம் சொல்லும்போது, இதுதான் கலை என்று எனக்கு உணர்த்தியர் அவர். அவருக்கு இந்த படத்தை அர்ப்பணிக்கிறேன்” இவ்வாறு மாரி செல்வராஜ் பேசினார்.

‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘வாழை’. இதனை நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன.

இப்படம் வெளியீட்டில் தாமதம் இருந்த நிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE