முடிவுக்கு வருகிறது தனுஷ் பிரச்சினை? - தயாரிப்பாளர்கள் - நடிகர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

தனுஷ் மீது கூறப்பட்ட புகார் மற்றும் படப்பிடிப்பு பணிகளை நிறுத்துவது தொடர்பாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் கூடிய நடிகர் சங்க செயற்குழுவில், இது தொடர்பாக இரண்டு சங்கங்களும் பேசி முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இரண்டு அமைப்பின் நிர்வாகிகளும் நேற்று முன் தினம் கூடி, பேச்சுவார்த்தை நடத்தினர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, தனுஷ் நடித்து, இயக்கும் படத்தைச் சிலவருடங்களுக்கு முன் தொடங்கினார்.

சில காரணங்களால் அந்தப் படம் மீண்டும் தொடங்கப்படவில்லை. தனுஷ் கால்ஷீட்கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகர் சங்க நிர்வாகிகளிடம் பேசிய முரளி ராமசாமி, அவர் எப்போது கால்ஷீட் தருவார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுபற்றி தனுஷிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று அவர்கள் கூறினர்.

இதே போல தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசனும் பல வருடங்களுக்கு முன் தனுஷுக்கு அட்வான்ஸ் கொடுத்ததாகவும் அதற்கு அவர் கால்ஷீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதே போல நடிகர்கள் தரப்பிலும் சில தயாரிப்பாளர்கள், சம்பளம் தரவில்லை என்று கூறப்பட்ட புகாரை, அவர்கள் கொடுத்தனர். இது தொடர்பாக இரு சங்கத்தினரும் சுமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE