மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘பரோஸ்’. ஃபேன்டஸி கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். குழந்தைகளைக் கவரும் விதமாக 3டி-யில் உருவான இந்தப் படம் பான் இந்தியா முறையில் வெளியாகிறது.
ஜிஜோ புன்னூஸ் எழுதிய 'பரோஸ்: கார்டியன் ஆஃப் டி'காமா'ஸ் ட்ரெஷர்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஸ்கிரிப்டை இயக்குநர் டி.கே.ராஜீவ்குமார் எழுதியுள்ளார்.
இந்நிலையில் ஜெர்மனியில் வசிக்கும் மலையாள எழுத்தாளர் ஜார்ஜ் துண்டி பரம்பில் என்பவர், இந்தப்படத்தின் கதை தனது ‘மாயா’நாவலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி மோகன்லால், தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், டி.கே. ராஜீவ்குமார், ஜிஜோ புன்னூஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காப்புரிமை பிரச்சினை தீரும்வரை படத்தை வெளியிடக் கூடாது என்றும் அந்த நோட்டீஸில் அவர் தெரிவித்துள்ளார்.