ஹைதராபாத்: “எங்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும். அது தொடர்பான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் உள்ளது” என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் விக்ரம் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், “ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் நீங்கள் நடிப்பதாக கூறப்படுகிறதே?” என கேள்வி எழுப்பியதற்கு, “ராஜமவுலி என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக எங்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும். அது தொடர்பான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் தான் உள்ளது. அது இந்தப் படமா என்பது தெரியாது” என்றார்.
இயக்குநர் ராஜமவுலி ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு மகேஷ்பாபுவை நாயகனாக வைத்து புதிய படம் இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் அல்லது விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் விக்ரம் இவ்வாறு பதிலளித்துள்ளார். முன்னதாக, தனது புதிய படம் குறித்து பேசியிருந்த ராஜமவுலி, “படத்தின் நாயகன் மகேஷ்பாபு. மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.