“அது நான் இல்லை” - ‘மழை பிடிக்காத மனிதன்’ சர்ச்சைக்கு விஜய் ஆண்டனி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் காட்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விஜய் மில்டன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கும் விஜய் ஆண்டனிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது ‘சலீம் 2’ இல்லை. என விளக்கம் அளித்திருந்தார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் துவக்கத்தில் வரும் ஓர் அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்களும், இயக்குநரும் கலந்து பேசி, அதை இன்று முதல் திரையரங்குகளில் நீக்கி விடுவதென முடிவு எடுத்துவிட்டனர். இந்த பிரச்சினை முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மழை பிடிக்காத மனிதன் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை: இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. படத்துக்கு அச்சு ராஜாமணியுடன் விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். மேகா ஆகாஷ் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் சென்சாருக்கு பிறகு ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் விஜய் ஆண்டனி கேரக்டரின் பின்கதை அதில் முன்கூட்டியே சொல்லப்படுவதாகவும் விஜய் மில்டன் குற்றம் சாட்டியிருந்தார். தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே இந்த காட்சி சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE