‘வட சென்னை 2’ எடுத்தால் சந்திராவாக நடிப்பேன்: ஆண்ட்ரியா உறுதி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “வட சென்னை 2-ம் பாகம் எடுக்கப்பட்டால், நிச்சயம் சந்திரா கதாபாத்திரத்தில் நடிப்பேன். மீண்டும் சந்திரா வருவாள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஆண்ட்ரியா, “இப்போது ‘மாஸ்க்’ என்ற படத்தில் கவினுடன் நடித்துக்கொண்டு இருக்கிறேன். சமீபத்தில் புதிய பாடல்கள் எதுவும் நான் பாடவில்லை. விரைவில் அது மீண்டும் தொடங்கும். வரலாற்றுக் கதைகளில் நடிக்கும் ஆசை எதுவும் எனக்கு இல்லை” என்றார். தொடர்ந்து அவர், “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. கண்டிப்பாக எனக்கு அரசியலுக்கு வரும் நோக்கம் சிறிதும் இல்லை. திரைப்பட துறையில் நான் ஆசைப்பட்ட த்ரில்லர், ஹாரர், அட்வென்ச்சர், காதல் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டேன்” என்றார்.

‘வட சென்னை 2’ படத்தில் சந்திரா கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. வட சென்னை இரண்டாம் பாகம் எடுப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். அப்படி அந்த படம் எடுக்கப்பட்டால் நீங்கள் நடிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அடுத்த முறை நீங்கள் பேட்டி எடுக்கும்போது இதுபற்றி இயக்குநர் வெற்றிமாறனிடம் தான் கேட்க வேண்டும். ‘வட சென்னை 2’ படம் நடந்தால் நிச்சயம் சந்திரா கேரக்டரில் நடிப்பேன். மீண்டும் சந்திரா வருவாள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்றார் ஆண்ட்ரியா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE