செல்ஃபிக்கு முயன்ற ரசிகரை தள்ளிவிட்ட சிரஞ்சீவி: வைரல் வீடியோவும், நெட்டிசன்கள் ரியாக்‌ஷனும்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை நடிகர் சிரஞ்சீவி தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நெட்டிசன்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது மனைவி சுரேகா, மகன் ராம் சரண், மருமகள், பேத்தி ஆகியோருடன் பாரிஸ் சென்றிருந்தார். இன்று அவர் நாடு திரும்பினார். இந்நிலையில், விமான நிலையத்தில் அவர் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை தள்ளிவிட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வேகவேகமாக நடந்து வந்துகொண்டிருக்கும்போது, விமான நிலைய பணியாளர் ஒருவர் சிரஞ்சீவி உடன் செல்ஃபி எடுக்க முயல்கிறார். முதலில் கண்டுக்காமல் நடந்து செல்லும் சிரஞ்சீவி, அடுத்து ஓரிடத்தில் நிற்க, அந்த ரசிகர் மீண்டும் செல்ஃபி எடுக்கிறார். அப்போது அவரை கையால் அழுத்தி தள்ளுகிறார் சிரஞ்சீவி. அவரது இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் அவரது ரசிகர்கள் சிலர், “சிரஞ்சீவி ஒரு டீசன்டான மனிதர். காரணம் அவர் களைப்பான பயணத்தை முடித்து வந்துகொண்டிருக்கும்போது தொடர்ச்சியாக செல்ஃபி எடுக்க முயன்று தொந்தரவு செய்யும் நபரை தள்ளிவிடுகிறார். இதே மற்ற நடிகர்களாக இருந்தால் அவரது செல்ஃபோனை தூக்கி வீசியிருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலர், இது சிரஞ்சீவியின் மோசமான நடத்தையை வெளிப்படுத்துகிறது என விமர்சித்துள்ளனர். இதேபோல சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் பாதுகாவலர்கள் விமான நிலையத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற மாற்றுத்திறனாளி ரசிகரை தள்ளிவிட்டனர். பின்பு இந்த சம்பவத்துக்கு நாகர்ஜுனா மன்னிப்புக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE