திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகளில் நடிகை நிகிலா விமல் ஈடுபட்டார். மேலும் உன்னிமுகுந்தன் உள்ளிட்ட மலையாள திரையுலகினரும் களத்தில் குதித்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. 225 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் நாளாக இன்று (புதன்கிழமை) மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மலையாள நடிகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் நடிகை நிகிலா விமல், ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் (DYFI) இணைந்து நிவாரண உதவிகளில் ஈடுப்பட்டார். கண்ணூரைச் சேர்ந்த அவர், அங்குள்ள தலிம்பம்பா தாலுகாவின் நிவாரண மையத்தில் நிவாரண பொருட்களை மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோவை அவரது ரசிகர்கள் ‘கேரளாவை மீட்போம்’ என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் உன்னி முகுந்தன், மஞ்சு வாரியர், ஷேன் நிகாம், உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பலரும் சமூக வலைதளங்களின் வாயிலாக மீட்பு பணிகளில் களத்தில் இறங்கி செயல்பட தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். உன்னி முகுந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “மீட்புப் பணியாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை. பேரிடரை சமாளிக்க நம்மால் முடிந்ததைச் செய்ய அனைவரும் முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
» பிரசாந்தின் ‘அந்தகன்’ ரிலீஸ் தேதி மாற்றம்: ஆகஸ்ட் 9-ல் வெளியீடு!
» “நடிகை அபர்ணதி புரமோஷன் நிகழ்வில் பங்கேற்க ரூ.3 லட்சம் கேட்டார்” - சுரேஷ் காமாட்சி பகிர்வு