பட விழாக்களுக்கு வராமல் இருப்பதா? - அசோக்செல்வன் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ள படம், ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இதில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி உட்பட பலர் நடித்துள்ளனர். திருமலை தயாரித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதற்கு அசோக்செல்வனும் நாயகி அவந்திகாவும் வரவில்லை.

படத்தின் தயாரிப்பாளர் திருமலை பேசும்போது, “இதில் நடித்துள்ள அசோக் செல்வனும் ஒரு படத்தைத் தயாரித்துள்ளார். தயாரிப்பாளரின் பிரச்சினை அவருக்கும் தெரியும். இப்போது அவர் ரூ.2 கோடி சம்பளம் வாங்கலாம். அது சந்தோஷம் தான். ஆனால், இயக்குநரும் தயாரிப்பாளரும் இல்லை என்றால், எந்த நடிகரும் நடிகையும் கிடையாது. ரஜினிகாந்த், விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்கள் அனைவரும் அவர்கள் பட புரமோஷனுக்கு வந்து நிற்கிறார்கள். ஆனால், அசோக் செல்வன் புரமோஷனுக்கு வரவில்லை. இந்தப் படம் வெற்றி பெற்றால் அதைச் சொல்லி அவர்தான் அதிக சம்பளம் கேட்கப் போகிறார். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடப்பது இல்லை” என்றார்.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “ஒரு படத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அந்தப் படத்தின் விழாக்களில் நடிகர், நடிகைகள் கலந்துகொள்ள வேண்டும். படம் வெற்றியடைந்தால் 80 சதவிகித லாபம் அதில் நடித்துள்ள நடிகர், நடிகைகளுக்குத் தான். படம் ஓடினாலும் தயாரிப்பாளர் திருமலை அப்படியேதான் இருப்பார். அவர் கடனில் இருந்து வெளியே வரலாம். எந்த படத்தின் புரமோஷனுக்கும் வராத நடிகர், நடிகைகளை வைத்து நாங்கள் படமே எடுக்க மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரே குரலாக ஒலித்தால் தமிழ் சினிமா நன்றாக இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE