‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துள்ள ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த், பள்ளிக்குச் செல்ல மறுத்த தனது பேரன் வேத் கிருஷ்ணாவை காரில் அழைத்துச் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என 2 மகள்கள். இரண்டாவது மகள் சவுந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளார். அதில், ‘என் மகன் பள்ளிக்குப் போக மறுத்து அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அவனது தாத்தாவான சூப்பர் ஹீரோ பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நிஜ வாழ்விலும் சரி, திரையிலும் சரி, நீங்கள் ஏற்கும் எல்லா பாத்திரங்களிலும் சிறப்பாக இருக்கிறீர்கள் அப்பா’ என்று பதிவிட்டுள்ளார். பள்ளியில் ரஜினியைப் பார்த்த மாணவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.