‘அந்தாதுன்’ படத்தை ரீமேக் செய்தது ஏன்? - பிரசாந்த் விளக்கம்

By செய்திப்பிரிவு

இந்தியில் வெற்றி பெற்ற 'அந்தா துன்' படம் தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.

அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆக. 15-ம் தேதி வெளியாக இருக்கும்.இப்படத்துக்காக ‘அந்தகன் ஆன்தம்’ என்ற புரமோஷனல் பாடல் உருவாகியுள்ளது. அனிருத், விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலை நடிகர் விஜய் நேற்று வெளியிட்டார்.

படம்பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பிரசாந்த் கூறும்போது, “இந்த ஆன்தம் பாடலை வெளியிட வேண்டும்என்று விஜய்யிடம் கேட்டேன். உடனே வெளியிடுகிறேன் என்றார்.

பாடலைப் பார்த்துவிட்டுப் பாராட்டினார். அவர் எனக்கு சகோதரர் போன்றவர். அவருக்கு நன்றி. இந்தப் படத்தில் பார்வையற்றவனாக நடித்திருக்கிறேன். என் அப்பா தியாகராஜன் இயக்கி இருக்கிறார்.

நடிகர், நடிகைகளுக்கு சுதந்திரம் கொடுத்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படத்தை தமிழில் ரீமேக் பண்ணுவதற்கு இதன் திரைக் கதைதான் காரணம்.

தமிழுக்கு ஏற்ப சில விஷயங்களை அப்பா அருமையாக மாற்றியிருக்கிறார். நிறைய செலவுகளைச் செய்திருக்கிறார். ரீமேக் படம் என்றால் ஒப்பீடு இருக்கும் என்று கேட்கிறார்கள். இதில் அனைத்தும் சிறப்பாக இருக்கும். இதில் என் தோழி சிம்ரன் நடித்திருக்கிறார். இருவரும் சேர்ந்து ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும் இதிலும் அவர் நடிப்பு மிரட்டலாக இருக்கும். பிரியாஆனந்த் உட்பட பலரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE