“பிஷ்னோய் கும்பல் என்னை கொல்ல திட்டமிட்டது” - போலீஸாரிடம் சல்மான் கான் வாக்குமூலம்

By செய்திப்பிரிவு

மும்பை: தன்னையும் தன் குடும்பத்தினரையும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸாரிடம் நடிகர் சல்மான் கான் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பை பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே, கடந்த ஏப்ரல் மாதம் இரு இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் அவர்கள் தப்பியோடினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக விக்கி குப்தா (24), சாகர் பால் (21) என்ற இரு இளைஞர்களை மும்பை காவல் துறை கைது செய்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக நடிகர் சல்மான் கானிடம் மும்பை போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். அதில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் இருவரும் பொறுப்பேற்றுக் கொண்டதாக ஒரு பேஸ்புக் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டதாக சல்மான் கான் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தானும் தன்னுடைய குடும்பத்தினரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் தங்களை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் திட்டமிட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே சிலமுறை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் நடிகர் சல்மான் கானுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE