சொர்க்கத்தில் விவாகரத்துகள்: ராம்கோபால் வர்மா சர்ச்சை பதிவு

By செய்திப்பிரிவு

பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். திருமணம் பற்றி இப்போது வெளியிட்டுள்ள கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, நடாசா ஸ்டான்கோவிச் பிரிந்ததை அடுத்து திருமணம் பற்றிய கருத்துகளை ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ளார்.

அதில், “திருமணங்கள் நரகத்திலும், விவாகரத்துகள் சொர்க்கத்திலும் நிச்சயிக்கப்படுகின்றன. இன்றைய திருமணங்கள் பெற்றோர்கள், திருமண விழாவை நடத்தும் வரையாவது நீடிக்குமா? என்பது ஆச்சரியம்தான். ஒருவரின் முதுமையைக் கவனிப்பதற்குத் திருமணத்தை விட ஊதியம் பெறும் செவிலியர், சரியானவராக இருப்பார்.

ஏனென்றால் அது அவருக்கு சம்பளம் தரும் வேலை. ஆனால், மனைவி தனது வயதான கணவனைக் குற்றவாளியாக உணர வைப்பார். ஒரே நபரை மீண்டும் மீண்டும் நேசிக்கும் திறன் இருந்தால் மட்டுமே திருமண வாழ்வு நீடிக்கும். இன்றைய நாட்களில் விவாகரத்துகள் அதிகரித்து வரும் நிலையில், திருமணத்துக்காக பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கும் பெற்றோர்கள் மிகப்பெரிய முட்டாள்கள். காதலுக்கு கண்ணில்லைதான். ஆனால் திருமணம் அந்த கண்ணைத் திறக்கும்” என்று தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிந்த போது, ‘புத்திசாலிகள் காதலிக்கிறார்கள், முட்டாள்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்’ என்று ராம் கோபால் வர்மா கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE