நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி’. புராணக்கதையை மையமாகக் கொண்ட அறிவியல் புனைகதை படம் இது. கடந்த ஜூன் மாதம் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கல்கிதாம் மடாதிபதியுமான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம், ‘கல்கி 2898 ஏடி’ படம் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி இயக்குநர் நாக் அஸ்வின், பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவர் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உஜ்ஜாவல் ஆனந்த் சர்மா அனுப்பியுள்ள நோட்டீஸில், “இந்தியா நம்பிக்கை மற்றும் பக்தி நிறைந்த நாடு. சனாதன தர்மத்தின் மதிப்புகளை சிதைக்கக் கூடாது. வேதங்களை மாற்றக் கூடாது. கல்கி அவதாரம் பற்றி புராணங்களில் கூறப்பட்டுள்ளதற்கு முரணாக இந்தப் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது தவறான புரிதலுக்கும், விளக்கத்துக்கும் வழிவகுக்கும். புனித நூல்களைத் தவறாகச் சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.