புஷ்பா இயக்குநருடன் அல்லு அர்ஜுன் மோதல்?

By செய்திப்பிரிவு

அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கிய இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். டாலி தனஞ்செயா, சுனில், மைம் கோபி உட்பட பலர் நடித்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். தெலுங்கில் வெளியான இந்தப் படம், தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் ஆக. 15-ல் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் டிச. 6-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இன்னும் பல காட்சிகளை ரீ ஷூட் பண்ண வேண்டும் என்று இயக்குநர் கூறியதாகத் தெரிகிறது. இதனால் சுகுமாருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் மோதல் வெடித்ததாகவும் படப்பிடிப்பில் இருந்து இருவரும் வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் இதை மறுத்துள்ளார் தயாரிப்பாளர் பன்னி வாசு. அவர் கூறும்போது, “புஷ்பா 2 படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கிறது. 15-17 நாட்கள் ஷூட்டிங் மீதமுள்ளது. சுகுமாருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் மோதல் என்பது பொய் தகவல். சுகுமார் அதிக நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டிருந்தால், அல்லு அர்ஜுன் கண்டிப்பாகக் கொடுத்திருப்பார். இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE