சென்னை: “வாரிசு படத்தில் இடம்பெற்றிருந்த எனக்கும் விஜய்க்குமான காட்சிகள் மிகுந்த எமோஷனலான அழகான காட்சிகள். அவை படமாக்கப்படும்போது நானும் விஜய்யும் உண்மையாகவே அழுதுவிட்டோம்” என நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “வாரிசு படத்தில் எனக்கும், விஜய்க்கும் இடையிலான மிகவும் எமோஷனலாக காட்சிகள் படமாக்கப்பட்டது. அது ஒரு தனி ட்ராக்காக இருந்தது. அழகான ட்ராக் அது. இறுதியில் அது குடும்பத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும்.
நான் நடித்த அனைத்து சீன்களும் விஜய் உடன் தான் படமாக்கப்பட்டது. வேறு யாருடனும் எனக்கு அந்தப் படத்தில் காட்சிகள் இல்லை. ஆனால் அது நீக்கப்பட்டுவிட்டது. இயக்குநர் வம்சி, நேரில் வந்து, படத்தின் நீளம் அதிகமாக உள்ளது, அதனால் இதனை நீக்கவேண்டியிருக்கிறது என்று சொன்னார். அப்போது நான் அவரிடம், அப்படியென்றால் ஒரு ப்ரேம் கூட இருக்க கூடாது என சொல்லிவிட்டேன். அவரும் உறுதியளித்தார்.
எனக்கும் விஜய்க்குமான அந்த காட்சிகள் மிகுந்த எமோஷனலான அழகான காட்சிகள். அவை படமாக்கப்படும்போது நானும் விஜய்யும் உண்மையாகவே அழுதுவிட்டோம். படம் வெளியான பின்பு நானும் விஜய்யும் பேசும்போது கூட அவர் அந்தக் காட்சிகள் குறித்து பேசியிருக்கிறார். நீக்கப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்தார்” என்றார்.