மும்பை: ஷாருக்கான் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கிட்டத்தட்ட அமிதாப் பச்சனே உறுதி செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. ஒரே ஆண்டில் மூன்று படங்களில் நடித்து அசத்தினார் ஷாருக். இந்த ஆண்டில் அவருக்கு எந்தப் படங்களும் இல்லை. அவர் நடிக்கும் புதிய படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஷாருக்கானின் புதிய படத்தை ‘கஹானி’, ‘ஜானே ஜான்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்துக்கு ‘கிங்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானின் மகள், சுஹானா திரையுலகில் அறிமுகமாகிறார். அனிருத் படத்துக்கு பின்னணி இசை அமைப்பார் என கூறப்படுகிறது.
தற்போது, இந்தப் படத்தின் புதிய அப்டேட்டாக அமிதாப்பச்சனின் மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் ஷாருக்கானுக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அமிதாப் பச்சனே ஒருவகையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
» ஆசிஃப் அலி கரங்களால் விருது பெற மறுத்த மலையாள இசையமைப்பாளர் - ரசிகர்கள் அதிருப்தி
» போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் கைது
ரசிகர் ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில் அபிஷேக் பச்சன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் செய்தியை பகிர்ந்து, ‘breath: into the shadows’, ‘raavan’ படங்களைப் பார்த்தவர்களுக்கு அபிஷேக் பச்சனால் எதிர்மறை கதாபாத்திரத்தில் எந்த அளவுக்கு நடிக்கு முடியும் என்பது தெரியும். சிறப்பான நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்துவார்” என பதிவிட்டுள்ளார். இதனை மேற்கொள்காட்டி கருத்து பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், “வாழ்த்துகள் அபிஷேக். இது தான் சரியான நேரம்” என பதிவிட்டுள்ளார். அமிதாப் பச்சனின் கருத்து மூலம் தகவல் உறுதியானது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.