35-வது வயதில் நடிப்பில் இருந்து விலகுவதாக துஷாரா விஜயன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: “என்னுடைய 35-வது வயதில் நடிப்பில் இருந்து விலகிவிடுவேன். அதன்பின்பு, நான் இந்த உலகம் முழுவதும் பயணிக்க விரும்புகிறேன். உலகில் நான் பயணிக்காத நாடே இல்லை என சொல்லும் அளவுக்கு பயணத்தில் கவனம் செலுத்துவேன்” என நடிகை துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ள ‘ராயன்’ படம் இம்மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக நடிகை துஷாரா விஜயன் அளித்த பேட்டி ஒன்றில், “இதை என்னுடைய சாதனையாக நினைக்கிறேன். இந்த உணர்வை என்னால் விவரிக்கவே முடியாது. நான் தனுஷின் மிகப்பெரிய ரசிகை. அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனக்கு கனவு. இதை ‘பாட்ஷா’ படத்தின் இடைவேளை காட்சியுடன் ஒப்பிட்டுக் கொள்கிறேன்.

இது என்னுடைய திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும். தனுஷை பொறுத்தவரை அவர் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அதில் அதிகமாகவோ, குறைவாகவோ இருப்பதை விரும்ப மாட்டார். நான் இதுவரை பணியாற்றியதிலேயே மிகவும் வித்தியாசமான இயக்குநர் தனுஷ். ஆக்‌ஷன் என மைக்கில் சொல்லிவிட்டு அடுத்த நொடியே கேமராவுக்கு முன்னால் வந்து நின்று நடிக்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அந்த நொடியில் படத்தின் கதாபாத்திரமாக அவர் மாறுவதைப் பார்க்கும்போது இன்ஸ்பிரேஷனாக இருக்கும்” என்றார்.

மேலும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த கேள்விக்கு, “தற்போது எனக்கு 26 வயதாகிறது. என்னுடைய 35-வது வயதில் நடிப்பில் இருந்து விலகிவிடுவேன். அதன் பின்பு, நான் இந்த உலகம் முழுவதும் பயணிக்க விரும்புகிறேன். அதற்காக நான் 35 வயதுக்கு மேல் நடிக்கமாட்டேனா என்றால், அப்படியில்லை. இந்த உலகத்தில் நான் பயணிக்காத நாடே இல்லை என்பதை உறுதி செய்யும் அளவுக்கு எல்லா நாடுகளுக்கும் பயணிப்பதிலேயே கவனம் செலுத்துவேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE