தனுஷ் குறித்து பிரகாஷ் ராஜ் பெருமிதம் முதல் செல்வராகவன் பகிர்வு வரை @ ‘ராயன்’ இசை நிகழ்வு

By செய்திப்பிரிவு

சென்னை: “தனுஷின் அசுர வளர்ச்சியைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். அழகான வளர்ச்சி இது. இன்று ஓர் இயக்குநராக தனுஷ் வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.

தனுஷ் தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பேசுகையில், “10 கிலோ சதை, 15 கிலோ எழும்ப வைச்சு துள்ளிட்டு இருக்க என்று நான் ஒரு படத்தில் வசனம் பேசியிருந்தேன். அவர் இன்னும் துள்ளிட்டுதான் இருக்காரு. அவரது அசுர வளர்ச்சியைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். அழகான வளர்ச்சி இது. இன்று ஓர் இயக்குநராக தனுஷ் வளர்ந்து நிற்கிறார். ராயன் திரைப்படம் மிகவும் சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்கும். அதற்காக படக்குழு மிகுந்த முயற்சி எடுத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக தனுஷின் வசனங்கள் படத்தில் மாஸாக இருக்கும்” என்றார்.

காளிதாஸ் ஜெயராம் பேசுகையில், “தனுஷ யாருக்குங்கள பிடிக்காம இருக்கும். நான் அவரை ஒரு குருவாக பார்க்கிறேன். புதுப்பேட்டை 2 படத்துக்காக காத்திருக்கிறேன்” என்றார். சந்தீப் கிஷன் பேசுகையில், “இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைந்து நடிக்கிறேன். அவர் எனது குரு. எனது அண்ணன். நான் கதையே கேட்காமல் நடிக்கும் முதல் படம் இது. தனுஷ் எல்லோருக்கும் பிடித்த ஒரு நல்ல மனிதர்.பெரிய அளவில் சாதிக்க விரும்பும் அனைவருக்கும் அவர் ஓர் அடையாளம். வேறு யாராவது இருந்திருந்தால் என்னுடைய கதாபாத்திரத்தில் அவர்களே டபுள் ஆக்ட் செய்திருப்பார்கள். காரணம் அந்த கதாபாத்திரம் அவ்வளவு ஆழமானது. ஆனால் தனுஷ் அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி” என்றார்.

செல்வராகவன் பேசுகையில், “தனுஷை நான் செதுக்கவில்லை. நான் கல்லு வைச்சிட்டு போய்ட்டேன். அவரே செதுக்கி கொண்டார். யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத நல்ல மனது கொண்டவர் தனுஷ். என்னைக்கும் அந்த மனதுக்கு எந்தக் குறையும் வராது” என்றார். துஷாரா விஜயன் பேசுகையில், “படத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. படப்பிடிப்பில் திட்டும் வாங்கியுள்ளேன். படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE